Monday, March 17, 2008

428. சுகுணா விலாசம் (அ) சிவப்புச் சாயம் வெளுத்த நரிகள் - BY கி அ அ அனானி

ரொம்ப நாட்களுக்குப் பின் திடீரென்று கி.அ.அ.அனானியிடமிருந்து ஒரு மேட்டர் மெயிலில் வந்தது. பதிவொன்றுக்கு எதிர்வினையாக அமைந்துள்ள கி.அ.அ.அ வின் மேட்டரை பதிவு செய்வது அவசியமென்பதால், அவர் எழுதி அனுப்பியதை (முதல் தடவையாக) எடிட் செய்யாமல் அப்படியே தந்திருக்கிறேன்.

இதை பதிப்பிக்கக் காரணம் .... கருத்துச் சுதந்திரம் தான் ! கி.அ.அ.அ பதிவுகளுக்கு விதவிதமாக டிஸ்கி எழுதி எழுதி அலுத்து விட்டதால், இதற்கு NO Disclaimer! அது போலவே, இப்பிரச்சினையில் எனது தனிப்பட்ட கருத்தை முன் வைக்கவும் விருப்பமில்லை, தேவையிருப்பதாகவும் நான் எண்ணவில்லை, அதனால் காலணா பிரயோஜனமும் இல்லை ! Over to கி.அ.அ.அனானி.

எ.அ.பாலா

************************************
முன்னதாக ஒரு "பின்" குறிப்பு : பதிவர் சுகுணா திவாகர் தனது வாயால் மட்டும் சிரிப்பதில்லை ( அவரே சொன்னதுதான்) அதனால்தான் அவர் எழுதும் சில பதிவுகள் அவர் எதாலோ சிரிக்கும் போது வெளிப்படும் நறுமண குணநலன்களைக் கொண்டிருக்கிறதோ என்னமோ.

மறைந்த எழுத்தாளர் சுஜாதாவை" "பாப்பார நாய்" என்று வர்ணித்து தனது தரத்தை மேலும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் கொண்டுள்ளார் சுகுணா திவாகர்.. இப்படியாக அடுத்தவரை ஜாதிய சாயம் பூசி திட்டும் இவர்தான் கொஞ்ச நாளைக்கு முன் " பிள்ளைமார் புத்தியை" காட்டிவிட்டாய் என்று யாரோ சொன்னதற்கு குமுறி குமுறி அழுது விட்டு பதிவுலகத்தில் " இன்றே இப்படம் கடைசி" போர்டெல்லாம் மாட்டி ஒப்பாரி ஓலமிட்டு ஓடினார். ( அப்புறம் எதிர்பார்த்த மாதிரியே இவர்களுக்கே உரித்தான கொள்கை தர்மப்படி புறவாசல் வழியாக மீண்டும் பதிவெழுத வந்த "கொள்கைக் குன்று " என்பது தனிக்கதை :) வலுவான எதிர்ப்பு இருக்காது என்பதற்காக வழக்கப்படி பார்ப்பனர்களை மட்டும் ஜாதி சொல்லித் திட்டும் இந்த மாதிரி " போலி ஜாதி எதிர்ப்பிற்கு " பார்ப்பனீயம், வர்ணம், ஜாதி அடுக்கு என்று என்ன 'லாஜிக்' எழவு வேண்டியிருக்கிறது?

இன்னும் (Director) சங்கர் சாகவில்லையே என்று வருத்தமாம்...அது சரி... எல்லோரும் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? எனக்குக் கூடத்தான் "எரிகிற கொள்ளிக்கட்டையை எடுத்து , அப்பாவி ஏழைகளை ஏமாற்றித் திரியும் போலி கம்யூனிஸ்டுகளின் ஆசன வாயில் சொருக வேண்டும் " என்று ஆசை.நிறைவேறுகிறதா பார்ப்போம்.

எழுத்தாளர் சுஜாதாவின் ஆளுமை மற்றும் தமிழ் எழுத்துலகில் அவரது சாதனைகள் இவைகளைப் பட்டியல் போட்டால் அதில் தேடிப் பிடித்து நொட்டை ,நொள்ளை சொல்லி விவாதிப்பார்களாம்..இப்படி ஒரு பின்னூட்டம் :)ஏற்கனவே சிலர் குறிப்பிட்டுள்ள படி " முன் முடிவுடன்" எழுதுபுவர்களுக்கு பட்டியல் போட்டால் மட்டும் புரிந்து விடவா போகிறது ? முன்னெல்லாம் "ரஷ்யா, சீனா என்று உதாரணம் சொல்லிக் கொண்டு அலைந்தவர்களெல்லாம் அதெல்லாம் காலாவதியாகிப் போன சரக்கானதும் " என்னைத்தவிர எல்லாமே தப்பு " என்ற ஒன் லைனர் சித்தாந்தத்திற்கு மாறி பித்துப் பிடித்து அலையும் அறிவின் நீட்சிதான் குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாத இப்படிப் பட்ட பதிவுகள் மற்றும் பின்னூட்டங்கள் என்பதைத்தவிர வேறென்ன சொல்ல ?

சுஜாதா ,சுரா இன்னும் பிற எழுத்தாளர்களது மேல் இவர்களுக்கு அப்படி என்ன "காண்டு"? வேறொன்றுமில்லை, இந்த எழுத்தாளர்கள் எதை எழுதினாலும் மக்கள் படிக்கிறார்கள் ஆனால் இவர்கள் இருக்கும் கொஞ்ச நஞ்ச மூளையை கசக்கிப் பிழிந்து எழுதும் சிவப்பு பிட் நோடிஸை அங்கங்கே தெரு முனையில் நின்று வினியோகம் செய்யும் கட்சித் தோழர்களே கூட படிப்பதில்லை என்ற பொறாமை பொச்சரிப்புதான்.ஒரு வேளை சுஜாதா ,சுரா போன்றவர்களை வைத்து எழுதினால் இந்த நோட்டீஸுகளை மக்கள் ஓரளவேனும் படிக்கக் கூடும் என்பது என் கருத்து.

தான் சொன்னது சரிதான் என்று நிலை நாட்ட பதிவில் மேலும் ராமராஜன் மற்றும் கே எஸ் ரவிகுமார் போன்றோரின் படங்களை வர்க்க ரீதியாக அளவு பார்த்து தரம் பிரித்து " சித்தாந்த செங்கோலை செங்குத்தாக" நிறுத்தியிருக்கும் காமெடியும் இருக்கிறது.படித்து மகிழலாம்.அடடா..இப்படிப் பட்ட ஆதரவு கிடைக்கும் என்று முன்னமேயே தெரிந்திருந்தால் ராமராஜன் தன் கலைச் சேவையை தொடர்ந்திருக்கக் கூடும்.

மற்றும் ஒரு விஷயம்... தனது திருமணம் பற்றி பறை சாற்றி முன்னம் எழுதிய சுய தப்பட்டக் கொள்கை விளக்கப்பதிவு. அப்பொழுதே அது பற்றி எழுத எத்தனித்து பின் எப்படியாகினும் அது அவரவருடைய தனிப்பட்ட விஷயம் என்பதால் மெளனமாக இருந்த, அதே குறைந்த பட்ச நாகரீகத்தை இப்போதும் பின்பற்றி அது பற்றி பேசாமல் விடுகிறேன்.இதை எதற்காக சொல்கிறேன் என்றால் ,தனி மனித தாக்குதல்களுக்கும் ,கொள்கைகளைத் தாகுவதற்கும் உள்ள வித்தியாசம் நூலிழைதான்.அதனால் அதை புரிந்து கொண்டு, எழுதும் போதும் பேசும் போதும் கவனமாக கைக் கொள்ள வேண்டும், எழுதுவதும் பேசுவதும் சுஜாதாவை பற்றியதாக இருந்தாலும் சரி,ஜெ மோவாக இருந்தாலும் சரி, சக பதிவராக இருந்தாலும் சரி..இல்லை ராமபிரானாகவோ அல்லது அல்லாவாகவோ இருந்தாலும்.

Saturday, March 15, 2008

427. ஆனந்தவிகடனில் அந்தோணி முத்து

அன்புக்குரிய சகோதரர் அந்தோணி முத்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, தமிழ் வலையுலக நண்பர்களிடம் உதவி வேண்டி ஒரு வேண்டுகோள் பதிவு இட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக, பல நல்ல உள்ளங்கள் பொருளுதவி செய்துள்ளனர். இது வரை சேர்ந்துள்ள தொகையை வைத்து அந்தோணிக்கு ஒரு மடிக்கணினி (அவர் விரும்பிய configuration-இல்) வாங்கித் தர உத்தேசம். அதன் வாயிலாக கணினி சார்ந்த வேலை ஏதாவது செய்து சிறிய அளவில் பணம் ஈட்ட முடியும் என்று அந்தோணி உறுதியாக நம்புகிறார். உதவிய / வாழ்த்திய நண்பர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அந்தோணியின் மற்றொரு முக்கியத் தேவையான (பாட்டரியால் இயங்கும்) சக்கர நாற்காலியின் விலை கிட்டத்தட்ட 60000 ரூபாய். அதற்கும் பொருளுதவி தேவைப்படுகிறது. உங்களால் இயன்றதைச் செய்யலாம். சிறுதுளி பெருவெள்ளம் அல்லவா ? உதவ விரும்பும் நண்பர்கள் தங்கள் மின்மடலை பின்னூட்டத்தில் தெரிவித்தால், (பணம் அனுப்பத் தேவையான) என் வங்கிக் கணக்கு விவரங்களை மின்மடலில் அனுப்புகிறேன். நிற்க.

19.3.2008 தேதியிட்ட ஆனந்தவிகடனில், அந்தோணி பற்றிய கட்டுரை ஒன்று வெளி வந்துள்ளது. அவரது அசாத்திய தன்னம்பிக்கை அதில் மிளிர்வதைக் காண முடிகிறது. அந்தோணியின் சமீபத்திய பதிவையும் வாசிக்கவும்.

ஸ்கேன் செய்யப்பட்ட, ஆ.வி.யில் வந்த கட்டுரை கீழே:






என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி: ஆனந்தவிகடன்

Monday, March 10, 2008

426. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 5

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

இரங்கல் கூட்டம் குறித்த எனது முந்தைய பதிவுகளை வாசித்து விட்டுத் தொடரவும்.

சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3
சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

ஒளிப்பதிவாளர்/இயக்குனர் தங்கர்பச்சான் பேசியதை வைத்துப் பார்க்கும்போது, வாத்தியாருக்கு மிக நெருங்கினவராக தன்னை அவர் உணர்ந்து கொண்டதை புரிந்து கொள்ள முடிகிறது.

வாத்தியாரின் கதைகளில் (ஓர் எழுத்தாளனுக்குரிய) சமூக அக்கறையும், மெல்லிய கோபமும் வெளிப்பட்டது என்றும், தனது டிப்ளமா படிப்பின்போது வாத்தியாரின் "வந்தவன்" கதையை பிராஜெக்டுக்காக படமாக்கியது பற்றியும் தங்கர் பேசினார். ஆங்கில இலக்கியத்தை தமிழுக்கு இட்டு வந்ததில் வாத்தியாரின் பங்கு அதிகம் என்றும், அவர் தன்னை ஒரு மகன் போல் பாவித்தார் என்றும் தங்கர் நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

தனக்கு கணினி அறிவு இல்லை என்று வாத்தியாரிடம் ஒரு முறை குறைபட்டுக் கொண்டபோது, அவர், "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் எல்லாம் புத்திசாலியில்ல, தங்கர், இப்டியெல்லாம் யோசிக்காம உங்க வேலையப் பாருங்க, அதில் உங்க திறமையைக் காட்டுங்க!" என்று நம்பிக்கை ஊட்டியதை தங்கர் நினைவு கூர்ந்தார்.

முதியோர் இல்லத்தில் வசிக்கும் பெற்றோரை மையமாக வைத்து தான் எழுதிய கதையை வாத்தியாரிடம் சொன்னபோது, அவர் லேசாக அழுததை (ஒரே ஒரு தடவை!) தான் கண்டதாகவும், தான் போட்டுக் காட்டிய 'பாரதி' படத்தை பார்த்து விட்டு வாத்தியார் பாராட்டியதாகவும், பல எழுத்தாளர்களை உருவாக்கியதில் வாத்தியாரின் பெரும்பங்கை யாரும் மறுக்க முடியாது என்றும் தங்கர் பேசினார்.

தனது மனக்கஷ்டங்களின்போது, வாத்தியாரிடம் பேசி தான் ஆறுதல் அடைந்தது பற்றியும், வாத்தியாரின் நெற்றியில் விழும் அந்த கீற்று முடி அவரது மறக்க முடியாத அடையாளம் என்றும் தங்கர் கூறினார். வாத்தியாரின் விமர்சனம் தனது பல கதைகளுக்கு மெருகு கூட்டியது என்றும், கடைசியாக அவரை சந்தித்தபோது, தனது 'தாய் மண்' கதையை அவரிடம் சொன்னது குறித்தும் தங்கர் தெரிவித்தார்.

(அமெரிக்க சென்ற) பிள்ளைகளைப் பிரிந்து வாத்தியாரும், அவரது துணைவியாரும் தனியாக வாழ்ந்த விஷயத்தில், தான் புத்திசாலி என்று கருதும் அவர் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளவில்லை என்பதை வாத்தியாரிடமே நேரடியாகக் கூறியபோதும் கூட, அவர் ஒரு புன்னகையுடன், "தூரமா இருந்தாக் கூட, பாசம் இருக்கும், தங்கர்!" என்று துளியும் கோபமின்றி பதில் கூறியதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கூட்டுக் குடும்பத்தையும், உறவுகளையும், கல்வி என்ற அசுரன் பிரித்துக் கொண்டிருப்பதாக தனக்கே உரிய பாணியில் சாடி, தங்கர் தன் பேச்சை நிறைவு செய்தார் !!!

எஸ்.ராமகிருஷ்ணன்:
சுஜாதாவை வாசகராகப் பார்த்த ஒரு தரப்பினரும், அவரை ஆதர்சமாகக் கொண்ட ஒரு தரப்பினரும் உள்ளனர். இது போல் ஒரு எழுத்தாளருக்கு அமைவது கடினம். வகுப்பறையில் கற்க முடியாத எதையும் கற்றுத் தரும் ஒரு "வாத்தியாராக" அவர் விளங்கினார்! கணையாழியின் கடைசிப் பக்கங்களில் சுஜாதா ஒரு முறை, "நல்ல வாசகர்கள் எழுத்தாளரை சந்திக்கவும் மாட்டார்கள், கடிதம் எழுதவும் மாட்டார்க்ள்" என்று கூறியிருக்கிறார் (எஸ்.ரா இப்படிப் பேசியது, வாய்ப்பிருந்தும் (தேசிகன் வாயிலாக) வாத்தியாரை நேரில் சந்தித்துப் பேச முடியாமல் போன எனக்கு மிக்க ஆறுதலாக இருந்தது!)

வாத்தியார் திறமையை இனம் காண்பதில் வல்லவர் என்பதை, அவர் பல வருடங்களுக்கு முன்பே கமலும், அருந்ததி ராயும் பெரிய அளவில் வருவார்கள் என்று தீர்க்கதரிசனத்துடன் சொன்னதை நினைவு கூர விரும்புகிறேன்.

'பூர்ணம் தியேட்டர்ஸ்' ரமேஷ், தான் பலப்பல விஷயங்களை வாத்தியாரிடம் பகிர்ந்து கொண்டிருப்பினும், அன்னியோன்யமாக நாம் உணர்ந்தவர்களிடம் நாம் பேசியது ஞாபகத்தில் இருப்பதில்லை என்றும், "பாரதி இருந்த வீடு" என்ற தங்கள் நாடகத்தைப் பார்த்து விட்டு வாத்தியார், "என்ன ரமேஷ், உங்க நாடகத்துல எல்லாரும் திகட்ட திகட்ட நல்லவங்களா இருக்காங்களே!" என்று கமெண்ட் அடித்ததையும் குறிப்பிட்டார். வாத்தியாரின் நகரம், வீடு, குதிரை போன்ற கதைகள் மறக்க முடியாதவை என்றும், அவரது 'ஸ்ரீரங்கத்துக் கதைகள்' ஒரு வகையில் 'சென்னை 28' திரைப்படத்திற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்க வாய்ப்புண்டு என்றும் கூறினார்.

ஒரு தடவை வாத்தியாரிடம் சில கவிதைகளை இரண்டு மூன்று முறை வாசித்தாலும் புரிவதில்லை என்று தான் கூறியவுடன், 'புரியலேன்னா விட்ருங்க ரமேஷ்' என்று வாத்தியார் சீரியஸாகச் சொன்னாராம்! 'கவிதை என்பது உனக்கு அப்பாற்பட்டது' என்ற அர்த்தத்தில் தான் வாத்தியார் அப்படிச் சொல்கிறாரோ என்று சந்தேகப்பட்டு ரமேஷ் மறுபடியும், "ஏன் அப்டி சொல்றீங்க ?" என்று விடாப்பிடியாகக் கேட்டபோது வாத்தியார், "எனக்கும் கூட சில கவிதைகள் எத்தனை தடவை வாசிச்சாலும் புரியறதில்ல, ரமேஷ்" என்று ஒரு போடு போட்டதையும் நகைச்சுவையாக ரமேஷ் நினைவு கூர்ந்தார் !!! "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என்ற கண்ணதாசனின் வரிகள் சுஜாதாவுக்கு பொருந்தும் என்றும் ரமேஷ் குறிப்பிட்டார்.

நண்பர் (ஓவியர்/பதிவர்) தேசிகன்:
வாத்தியாருடனான தன் முதல் சந்திப்பை நினைவு கூர்ந்த தேசிகன், அச்சமயம் தான் சுஜாதா சாரின் படம் ஒன்றை தன் கைப்பட வரைந்து, அதில் கையெழுத்து வாங்க அவரை அணுகியபோது, வாத்தியார், "அட, யார் இது ? என்னைப் போலவே இருக்கே!" என்று தனது usual ஸ்டைலில் கேட்டு விட்டு படத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்தாராம் ! அவரது பல கதைகளை வாத்தியார் தன்னுடன் டிஸ்கஸ் செய்தது பற்றியும், தனக்கு அவரது official biographer என்ற அந்தஸ்தை வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் புதிய skoda கார் வாங்கியவுடன், அதில் சென்ற முதல் ரவுண்டில் தன்னையும் கூட்டிச் சென்றதையும் தேசிகன் மிக்க நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தனது திருமணப் பத்திரிகையைக் கொடுத்து அழைக்க வாத்தியார் வீட்டுக்குச் சென்றபோது, பத்திரிகையைப் பார்த்து விட்டு தேசிகனைப் பார்த்து, "உன் விதியும் அப்படியிருந்தால், நான் என்ன செய்ய முடியும் !" என்று வாத்தியார் கூறவே, அவர் அப்படிச் சொன்னதின் அர்த்தம் புரிய தேசிகனுக்கு சற்று நேரமானதாம் (தேசிகனின் மனைவி பெயரும் சுஜாதா :))

தேசிகன் அன்று பேசிய பிற விஷயங்கள் அவரது அப்போலோ தினங்கள் பதிவில் இருக்கின்றன.

திருமலை (சுஜாதா அவர்களின் சகோதரர்):
அவர் தான் எனக்கு ரோல் மாடலாக விளங்கினார். ரேமண்ட்ஸ் விளம்பரத்தில் வரும் "The Complete man" என்பது அவருக்குப் பொருந்தும் ! நிறைந்த வாசிப்பனுபவம் மிக்கவராக இருந்தார். பல துறைகளிலும் தனது ஆளுமையை/திறமையை நிரூபித்தவர் அவர். அவர் ஒரு Original Thinker ! அவர் நன்றாக வரைவார், கிடார் வாசிப்பார், இசையில் ஞானமுள்ளவர் போன்ற விஷயங்கள் பலருக்கு தெரிந்திருக்காது. 120 ஆண்டுகளில் சாதிக்கத் தக்க விஷயங்களை என் அண்ணன் ஒரு 70 ஆண்டுகளிலேயே சாதித்து விட்டு போய் விட்டார் !!!! He was a Tall man, not just in terms of height but in stature too ! மற்றவரிடம் உள்ள நல்ல விஷயங்களுக்கே அவர் முக்கியத்துவம் கொடுப்பார். எங்கள் குடும்பத்தில் அவர் தான் இன்ஸ்பிரேஷனாகவும், மேற்கோள் காட்டத் தக்கவராகவும் இருந்தார்.

சுதாங்கன் (மூத்த பத்திரிகையாளர்):
எனது இயற்பெயரும் ரங்கராஜன் தான். ரா.கி.ர தான், சுஜாதாவுக்கு பெயர் சூட்டியது போல எனக்கும் இந்தப் பெயரை சூட்டினார். இந்த இரங்கல் கூட்டத்தை நானும், மதனும் கமலும் சேர்ந்து ஆர்கனைஸ் பண்ணியிருந்தால், அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்பட்டிருக்கும் ! இக்கூட்டத்தை, பார்த்திபனும், வசந்தும், கனிமொழியும் சேர்ந்து நடத்தியது நல்லதாகப் போயிற்று, அவர்களுக்கு என் நன்றிகள்.

ரா.கி.ரங்கராஜனின் மனைவி ஏதோ ஒரு கதையை வாசித்து விட்டு, என்னிடம், 'எப்படி ஒரு மகாத்மா தான் இருக்க முடியுமோ அது போல ஒரு சுஜாதா தான்' என்று மனம் விட்டுப் பாராட்டினார்.

எ.அ.பாலா:
இந்த சமயத்தில் நான் கிளம்பத் தயாராகி விட்டதால், குறிப்பு எடுப்பதை நிறுத்தி விட்டேன். சுதாங்கனுக்குப் பிறகு பேசிய வாத்தியாரின் பெண் உறவினர் ஒருவரும், வாத்தியாரின் டாக்டரும் பேசியதில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. அவ்விருவரும் வாசித்த (அஞ்சலிக்) கவிதைகளைக் கேட்க, நல்ல வேளை, வாத்தியார் உயிருடன் இல்லை !!!! இப்படி எழுதுவதற்கு வாத்தியார் என்னை மன்னிக்கவும் !

(இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடைந்தது)

எ.அ.பாலா

Friday, March 07, 2008

425. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 4

டோ ண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சென்ற பதிவில் கமல் கூறிய ஒரு விஷயத்தை விட்டு விட்டேன். சில வருடங்களுக்கு முன் மருதநாயகம் திரைப்படத்துக்காக தான் அது வரை எழுதியிருந்த திரைக்கதை வசனத்தை சீர் செய்வதற்காக வாத்தியாருக்கு கமல் அனுப்பினாராம். சுஜாதாவும் நிறைய நேரம் செலவழித்து ரெவ்யூ செய்து, சிலபல இடங்களில் திருத்திக்
கொடுத்ததோடு, "திரைக்கதை-வசனம்: கமல், சுஜாதா" என்று கமல் குறிப்பிட்டிருந்ததில், "சுஜாதா"வை அடித்து விட்டு, 'என் பெயரை போடத் தேவையில்லை' என்று நோட் போட்டு கமலுக்கு திருப்பி அனுப்பினாராம் ! அதை நினைவு கூர்ந்த கமல், "மருதநாயகத்துக்கு எழுத இன்னும் நிறைய இருக்கும் சூழலில், சுஜாதா சொன்னது போல, அவர் பெயரைப் போட முடியாமலேயே போய் விட்டது, படம் எடுத்தால் என் பெயரைத் தான் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று உண்மையான வருத்தத்துடன் கூறினார்.

கவிப்பேரரசு வைரமுத்து:
சுஜாதா மரபுகளை உடைத்தவர் என்பது இரங்கல் கூட்டத்தில் கரவொலி கூடாது என்பதை மீறி அவரது வாசகர்கள் பல இடங்களில் தங்களை மறந்து கை தட்டுவதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது ! இங்கு கஸ்தூரி ரங்கன் பேசும்போது, சுஜாதாவின் உயிரற்ற முகத்தைப் பார்க்க தான் விரும்பவில்லை என்று சொன்னதை என்னால் ஏற்க முடியவில்லை. சுஜாதா விஷயத்தில், வாழ்வு தராத மலர்ச்சியை மரணம் அவருக்குத் தந்ததாகவே கருதுகிறேன். ஏனெனில், அவரது அமைதியான முகத்தைப் பார்த்தபோது, அவரது கடைசி எண்ணம் மலர்ந்த, எழுச்சி மிக்க எண்ணமாகவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது ! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!)

செத்தபிறகு தான் எழுத்தாளர்களை தமிழர்கள் சிங்காரித்துப் பார்க்கிறார்கள். இதற்கு மாறாக, இருக்கும்போதே பாராட்டு விழா எடுக்க வேண்டும்! சுஜாதா வாழ்ந்தபோதே, இதே நாரதகான சபாவில் அவரை நடுநாயகமாக அமர்த்தி, நாமெல்லாம் அவரை பாராட்டிப் பேசியிருந்தால், அந்த பூரிப்பில் அவர் இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் வாழ்ந்திருப்பாரோ ?

சுஜாதாவின் எழுத்துகள் ஆழமான கடலுக்கு நிகரானது. அக்கடலில், சில வாசகர்கள் காலை மட்டும் நனைக்கவும் முடியும், சிலர் கட்டுமரம் செலுத்தவும் முடியும், சிலர் கப்பல் செலுத்தவும் முடியும், இன்னும் சிலர் அதில் மூழ்கி முத்தெடுக்கவும் முடியும் ! பிரபந்த வாசிப்பு அவருக்கு ஊட்டத்தைக் கொடுத்தது. மேல் நாட்டு இலக்கியதையும் நம் நாட்டு இலக்கியத்தையும் கலந்து அவர் தந்த fusion-ஐ, அதன் தனித்தன்மைக்காக
சுஜாதாயிஸம் என்று கூறுவேன்! (இங்கு மீண்டும் அரங்கில் கரகோஷம்!) ஏதோ ஒரு கதையில், ஒரு பெண்ணின் நிர்வாணப்படத்தைப் பற்றி சுஜாதா, "அவள் புன்னகையை மட்டும் அணிந்திருந்தாள்" என்று எழுதிய வரி என் மனதில் நிற்கிறது!

அவரது "தேவன் வருகை" சிறுகதையை உலகச் சிறுகதைகளில் சிறந்த பத்து கதைகளில் ஒன்றாக நான் கருதுகிறேன். வாசகரை பலவித சாத்தியங்களை உணர வைக்க வல்லது அக்கதையின் முடிவு! 'வாசகன் பெரியவனா, மரணம் பெரியதா?' என்ற கேள்விக்கு வாசகன் தான் பெரியவன் என்று தான் பதில் கூற முடியும், ஏனெனில் மரணத்துக்குப் பின்னும் ஓர் எழுத்தாளனை (அவனது எழுத்துகளை) வாழ வைப்பது அவனது வாசகன் தானே !!!

சுஜாதாவின் மறைவிலிருந்து நான் கற்றது இவை தான்.
1. எழுத்தாளன் சாகும்வரை எழுதிக் கொண்டே இருக்க முடியும்
2. உடல் உபாதைகள் எழுத்துக்கு எதிரி அல்ல
3. சக எழுத்தாளன் பற்றி புறம் பேசாமை, சக எழுத்தாளனை மதித்தல்.

அடுத்துப் பேசிய பிரகாஷ் சுவாமி, வாத்தியார் அமெரிக்கா சென்றிருந்தபோது, அறுவை சிகிச்சை பற்றி அவர் ஆங்கிலத்தில் எழுதிய 'All are my relatives' என்ற கட்டுரையை வாசித்த ரோஸன்தால் என்ற மூத்த பத்தரிகையாளர், சுஜாதாவின் ஆங்கிலப் புலமையையும், கட்டுரையின் satire-யையும், நகைச்சுவையையும் வெகுவாகப் பாராட்டி, வாத்தியாரின் நடை Art Buchwald-க்கு (அமெரிக்காவின் நம்பர் ஒன் நகைச்சுவை எழுத்தாளராக பலகாலம் விளங்கியவர்) நிகரானது என்று சிலாகித்ததை நினைவு கூர்ந்தார் !

வாத்தியார் பத்திரிகையாளர்கள் மேல் அன்பும் மரியாதையும் காட்டியவர் என்றும், ஒரு முறை Emmy விருதுகள் வழங்கும் ஜூரியில் ஒருவராக பிரகாஷ் சுவாமியை நியமித்தபோது, வாத்தியாருக்கு தொலைபேசிய அவர், அந்த விருது குறித்தும், விருதுக்குரியவரை தேர்ந்தெடுக்கும் வழிவகை பற்றியும் தனது அறியாமையை
வெளிப்படையாக வாத்தியாரிடம் எடுத்துக் கூறினாராம் ! வாத்தியார் எழுதிஅனுப்பிய விளக்க மடல், ஒரு ஜூரியாக தன் கடமையை தான் செவ்வனே செய்வதற்கு மிக்க உறுதுணையாக இருந்ததை பிரகாஷ் குறிப்பிட்டு, சுஜாதாவுக்கு தெரியாத விஷயங்கள் மிகக் குறைவு என்று தன் பேச்சை முடித்துக் கொண்டார் !

பதிவர் எல்லே ராம், சுஜாதாவின் யாகம் என்ற கதையை நாடகமாக ஆக்கி அமெரிக்காவில் அரங்கேற்றியதையும், வாத்தியாருக்கு எழுத்து உத்தியோகமாக இல்லாததால் தான் தமிழ் மேல் அவருக்கிருந்த காதல் மாறாமல் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.

சத்யராஜ், விக்ரம் படப்பிடிப்பின்போது வாத்தியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது என்றும், அவரது எழுத்து ஆளுமையையும், வாசிப்பையும் பார்த்து தான் பிரமித்தது பற்றியும் பேசினார். அவரது கடவுள் பற்றிய கட்டுரைகளிலோ அல்லது வாசகர் கடவுள் பற்றி கேள்வி எழுப்பும்போதோ, தான் மிகச் சிறந்த அறிவாளியாகக்
கருதும் சுஜாதா, 'கடவுள் இருக்கிறார்' என்று ஒருபோதும் கூறிவிடக் கூடாதே என்று தான் டென்ஷன் அடைந்தது (!)
குறித்தும் பேசினார் !!!

கனிமொழி:
சுஜாதாவின் எழுத்துக்களால் பாதிக்கப்படாத வாசகரோ, எழுத்தாளரோ இருக்க முடியாது! எது நல்ல சினிமா, எது நல்ல கதை என்று சுஜாதா வாயிலாக வருவதை மதித்த ஒரு வாசக / எழுத்தாள வட்டமிருக்கிறது என்பது தான் உண்மை, சிலர் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும் கூட !!!

'ஒரு எழுத்தாளரின் வாசகராக நீங்கள் இருந்தால், அவரை நேரில் சந்திக்கக் கூடாது, நீங்கள் உங்களுள் உருவாக்கி வைத்த அவரது பிம்பம் கலைந்து விடக் கூடும்' என்று சுஜாதா சார் அடிக்கடி கூறுவார் என்றும், ஆனால் சுஜாதா விஷயத்தில் தான் நேர் எதிராக உணர்ந்ததாகவும் கனிமொழி உள்ளார்ந்த அன்போடு குறிப்பிட்டார். சுஜாதா சிறிதும் காழ்ப்பற்றவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை ஒரு எழுத்தாளர் சுஜாதாவை தாறுமாறாக விமர்சனம் செய்து வந்த விஷயத்தை கனிமொழி சுஜாதவிடம் சுட்டிக்காட்டியபோது, வாத்தியார் குறிப்பிட்ட எழுத்தாளர் எழுதிய அருமையான ஹைக்கூ கவிதைகள் பற்றிக் கூறி பேச்சை மாற்றியதை குறிப்பிட்டார்!) என்றும், ஒரு Celebrity எழுத்தாளர் என்ற நினைப்பே இல்லாமல் இயல்பாகப் பழகியது பற்றியும், தான் அவரை ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதைக் காட்டிலும் ஒரு மிகச் சிறந்த மனிதராக எண்ணுவதாகவும் கனிமொழி தெரிவித்து தன் பேச்சை சுருக்கமாக நிறைவு செய்தார்.

(அடுத்த பதிவில் இரங்கல் கூட்டத் தொகுப்பு நிறைவடையும்)

எ.அ.பாலா

Thursday, March 06, 2008

424. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 3

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

அடுத்துப் பேசியவர் தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குனர் திரு.நடராஜன் அவர்கள். AIR-க்காக 1970-இல் ராஜாஜி நகரில் சுஜாதாவை 20 நிமிடங்கள் பேட்டி கண்டதை நினைவு கூர்ந்து, வாத்தியார் அதை ஒரு மாடல் பேட்டி என்று பாராட்டியதையும் குறிப்பிட்டார். திருமதி சுஜாதாவை meticulous என்று பாராட்டிவிட்டு, பெங்களூரில் வாத்தியாருடன் வாரம் ஒரு திரைப்படம் பார்த்த நாட்கள் பற்றியும், ஒரு நாடக விழாவுக்காக வாத்தியாரின் "என்றாவது ஒரு நாள்" கதையை நாடகமாக்கியது குறித்தும், வாத்தியாரின் சங்கீத ஞானத்தை சிலாகித்தும் நடராஜன் பேசினார்.

ஜெ.காவும், சுஜாதாவும் தானும் ஓர் இரவு முழுதும் கென்னத் லாட்ஜில் ஒரு அறையில் இலக்கிய அரட்டை அடித்த நிகழ்வு பற்றி நடராஜனும் நகைச்சுவையாகப் பேசினார். ஜெ.கா (சாவி வாங்கித் தரும் சாம்பார் சாதத்தை எப்போது வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று கூறியபடி!) வாத்தியாரையும் நடராஜனையும் வற்புறுத்தி இழுத்துச் சென்று, அவர் மட்டும் இரவு முழுதும் தண்ணியடித்தபடி, தங்களை பட்டினி போட்டதை நினைவு கூர்ந்த நடராஜன், அதிகாலையில் ஜெயகாந்தனைப் பார்த்து, "எவ்வளவு நேரம் சிப்ஸ் சாப்பிட்டு பொழுது போக்குவது?" என்று தாங்க முடியாமல் கேட்க, பின்னர் மூவரும் இம்பாலா ஓட்டலில் பரோட்டா சாப்பிட்ட மலரும் நினைவுகளை சுழல விட்டார் :)

வாத்தியார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றும், தான் அவரது எழுத்துகளுக்கு தீவிர விசிறி என்றும், அதே சமயம் வாத்தியாரின் பழகும் தன்மைக்கும், நற்குணங்களுக்கும் அடிமை என்றும் உணர்ச்சிகரமாகப் பேசி தன் உரையை நிறைவு செய்தார்!

(இயல்பாகவும் நகைச்சுவையாகவும் பேசிய) பேராசிரியர் ஞானசம்பந்தன் தான் பேச்சாளர் ஆனதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், வாத்தியார் எழுத்தில் கடைபிடித்த வேகத்தையும், சுருக்கத்தையும் தான் தனது பேச்சில் கடைபிடிப்பதாகவும் தன் பேச்சைத் தொடங்கினார். ஞானசம்பந்தன் ஒரு முறை வாத்தியார் வீட்டுக்குச் சென்று எது பற்றியோ நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்தபோது, சுஜாதா தனது மனைவியை அழைத்து, "இவர் எவ்வளவு அருமையா பேசறார், பாரேன்!" என்று கூறியபோது, திருமதி சுஜாதாவோ தான் பேராசிரியரை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பதால் தனக்கு ஆச்சரியம் ஏதுமில்லை என்று புன்னகைத்தாராம் :) இந்த பாராட்டால் தான் மிக்க மகிழ்ச்சியுற்றதாகவும், வாத்தியார் கள்ளம் கபடு இல்லா உள்ளம் கொண்டவர் என்பதற்கு இது சான்று என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார் ! ஞானசம்பந்தனின் பேச்சை கமல் மிகவும் ரசிப்பதாக ஒரு மேடைக் குறிப்பு வரவே, பேராசிரியர் தன் பேச்சைத் தொடர்ந்தார் !

வாத்தியாரின், "சசி காத்திருக்கிறாள்" என்ற சிறுகதையை, தான் வாசித்ததில் மிகச் சிறந்த ஒன்றாகக் கருதுவதாகவும், வாத்தியார் ஆழமான விவரங்களை தெரிந்து வைத்திருப்பவர் (இதற்கு உதாரணமாக, ஒரு முறை வாத்தியாருடன் மதுரை அழகர் கோயிலுக்கு ஞானசம்பந்தன் சென்றபோது, மதுரைக்காரரான பேராசிரியருக்கேத் தெரியாத விஷயமான, 'ஆண்டாள் பள்ளிப்படுத்தப்பட்ட இடம் அழகர் கோயில்' என்பதை சுஜாதா சொன்னபோது தான் ஆச்சரியப்பட்டதை குறிப்பிட்டார்!) என்றும் கூறினார்.

வாத்தியாரின் மர்ம நாவலான நிர்வாண நகரத்தை சிலாகித்துப் பேசிய ஞானசம்பந்தன், ஒரு கதையில் வசந்த் கணேஷைப் பார்த்து கூறும், "அவ நடையப் பாருங்க பாஸ், புதுமைப்பித்தன் நடை தோத்துரும்" என்று வாத்தியார் 'போகிற போக்கில்' எழுதியிருப்பதையும், 'திமலா' என்ற அறிவியல் புனைவுக் கதையை ஒரு பாசுரத்துடன் வாத்தியார் நிறைவு செய்த நேர்த்தியையும் சுட்டிக் காட்டினார் ! வாத்தியார் போல அறிவியல்/தொழில்நுட்பம் கற்றவர்கள் தமிழுக்கு வர வேண்டும் என்ற வேண்டுகோளோடு தன் இரங்கல் உரையை நிறைவு செய்தார்.

வாத்தியார் தனது 60 ஆண்டு கால நண்பர் என்று நெகிழ்ச்சியுடன் தன் பேச்சை ஆரம்பித்த கணையாழியின் கஸ்தூரி ரங்கன், அவருடன் வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிய பால்ய பருவத்தை நினைவு கூர்ந்தார்! தான் சுஜாதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப் போகாததற்குக் காரணம், தன் நினைவில் அவரது மலர்ந்த முகமே என்றும் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே என்ற கஸ்தூரி ரங்கன், கணையாழி நடத்தி வந்த 30 ஆண்டு காலத்தில், இலக்கிய ரீதியாக தாங்கள் எவ்வளவோ பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

எழுத்துக் கடமை (முக்கியமாக, ஆன்மிகம் சார்ந்த) முடிவுறாத நிலையிலேயே, சுஜாதா காலமாகி விட்டதாக தான் உணர்வதாக க.ர. கூறினார். சமீபத்தில் தொடங்கப்பட்டிருக்கும் "யுகமாயினி"யில் கடைசி 16 பக்கங்களை "கணையாழி பக்கங்கள்" என்று ஒதுக்கி, அதில் சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, க.ர மற்றும் திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் எழுத இருந்ததாக் குறிப்பிட்ட க.ர, ஓர் இதழுக்கு மட்டுமே சுஜாதா எழுத முடிந்தது (இது தான் வாத்தியார் கடைசியாக எழுதியது!) துரதிருஷ்டமே என்று கூறினார். வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு, "Best of Sujatha" என்ற தலைப்பில் யுகமாயினியில் இ.ரா.முருகன் எழுதுவார் என்று க.ர. கூறி தன் பேச்சை நிறைவு செய்தார்.

கமலஹாசன் தான் எழுதியதை எல்லாம் வாசிக்க / விமர்சிக்க வைத்து வாத்தியாரை படுத்தியிருப்பதாகவும், இனிமேல் தான் எழுதுவதை யாரிடம் காண்பித்து சரி செய்து கொள்வது என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார். வாத்தியாரின் (மொழிபெயர்க்கப்பட்ட) சில கதைகளை மலையாள வாசகர்கள் சிலாகித்துப் பேசும்போது (தமிழில் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பதற்காக) தான் கோபம் அடைந்ததாகவும், வாத்தியாரின் இரங்கல் கூட்டத்துக்கு இவ்வளவு பேர் வந்து மரியாதை செலுத்துவது வாசகத் தரத்தை உயர்த்திக் காட்டுகிறது என்றும் கூறிய கமல், இரங்கல் கூட்டத்துக்கு வந்த வாசகர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

வாத்தியாரிடம் (அவரது விரிந்த வாசிப்பினால்) மேல்நாட்டுத் தாக்கம் இருந்தபோதிலும், அந்த வாசிப்பில் பெற்றதை, இந்தச் சூழலுக்கேற்ப தமிழாக்கம் செய்ததால் தான் அவர் எழுத்து பெருவெற்றி அடைந்தது என்றும், ஒரு காலத்தில் வாத்தியாரைப் பார்ப்பதற்காகவே தான் பலமுறை பெங்களூருக்கு சென்றிருப்பதாகவும் கமல் கூறினார். முதன்முதலில் வாத்தியாரை சந்திப்பதற்கு முன்னால், அவர் வீட்டுக்கு தொலைபேசிய கமல், "Can I speak to Sujatha?" என்று வினவ, ஒரு பெண்குரல், "Speaking, நீங்க யார் பேசறது ?" என்றவுடன் ராங் நம்பர் என்று இருமுறை கமல் ·போனை வைத்து விட்டாராம் ! மறுபடியும் நிதானமாக டயல் செய்து, "Can I speak to writer Sujatha?" என்று கேட்க, திருமதி சுஜாதா, தொலைபேசியை கணவரிடம் தந்தாராம் :)

கமல் தனது வெளிப்படையான ஸ்டைலில், ஒரு கதையில் வாத்தியாரின் "ஏராளமான மார்புகள்" என்ற சொற்பிரயோகத்தைக் கண்டு தான் அசந்து விட்டதாகக் கூறினார் !!!

வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, ராமகிருஷ்ணன், தேசிகன், சுதாங்கன் ஆகியோர் பேசியதையும் எழுதினால், இப்பதிவு நீண்டு விடும் அபாயம் இருப்பதால், அடுத்த பதிவில் இரங்கல் கூட்ட நிகழ்வின் தொகுப்பை நிறைவு செய்கிறேன். தயவு செய்து காத்திருக்கவும் !

Tuesday, March 04, 2008

423. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 2

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

சாரு நிவேதிதா தனக்கு 2 நாட்களாக தூக்கமில்லை என்றும், பதற்றமாக இருப்பதாகவும் சொல்லி தன் பேச்சைத் தொடங்கினார். தனது இரண்டு ஆசான்கள் சுஜாதா மற்றும் ஜெ.கா என்றும், பாரதம், உபனிஷத், இன்னபிற விஷயங்கள் ஜெ.கா விடமிருந்து கற்றதாகவும், நவீன விஷயங்களை வாத்தியாரிடம் கற்றதாகவும் உணர்ச்சிகரமாகக் கூறினார். அதோடு, திருமதி சுஜாதா வாத்தியாரை போஷித்ததால் தான், அவர் வீட்டுக் கவலைகள் இன்றி எழுத்தில் வெற்றி பெற முடிந்தது என்றும், வாத்தியாரை அப்பாவாக நினைத்து அவர் பிரிவினால் வாடும் மனுஷ்யபுத்ரன், வசந்த் மற்றும் கனிமொழிக்கு தனது இரங்கல்களை தெரிவிக்க விரும்புவதாகவும் சொன்னார். மேலும், நடிப்புக்கு என்று பார்த்தால், சிவாஜிக்குப் பிறகு கமல், அவருக்குப் பிறகு சில நல்ல இளம் நடிகர்கள் இருப்பது போல, வாத்தியாரின் பாணியிலும், ரேஞ்சிலும் எழுத அவருக்குப் பிறகு யாருமே இல்லை என்பது தான் யதார்த்தம் என்று சாரு புகழாரம் சூட்டினார்.

சிவாஜி என்ற பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, வாத்தியார் எழுதிய முதல் கதையை மீட்டுத் தருபவருக்கு, பாதி சாம்ராஜ்ஜியத்தை தந்து, மகளையும் மணமுடித்துக் கொடுப்பதாக சுஜாதா 'சாவி'யில் ஓர் அறிவிப்பு விட்டதை சாரு நினைவு கூர்ந்தார். அவ்வறிவிப்பை வாசித்து தான் வாத்தியாரின் மருமகனாக ஆகும் வாய்ப்பு உள்ளதை எண்ணி குதூகலம் கொண்டு, சாவி வார ஏடுக்கு, தன்னிடம் வாத்தியாரின் அந்த 'முதல்' கதை பத்திரமாக இருப்பதாகவும், திருமணத்தை எங்கு எப்போது வைத்துக் கொள்ளலாம் என்று கேட்டும் சாரு ஒரு கடிதம் எழுதினாராம் :)

அந்த 'முதல்' கதையின் காப்பியை வாங்கித் தரும்படி சுஜாதா தன்னை நச்சரிப்பதாக சாருவுக்கு கடிதம் எழுதிய சாவி, வாத்தியாருக்கு மகள் கிடையாது என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார். சாருவும் பதிலுக்கு தானும் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டதை சாரு நகைச்சுவையாக நினைவு கூர்ந்தார். வாத்தியார் Roald Dahl போல எழுதுவதாக வாத்தியாரிடமே தான் கூறியதையும், வாத்தியாருக்கு (ஒரு நல்ல படைப்பாளிக்கு மிக அவசியமான) வாசிப்பின் மீது இருந்த passion பற்றியும், வாத்தியாரின் தொடர்ந்த கற்றலினால் அவர் எழுத்துக்கு என்றுமே வயதாகாதது பற்றியும், பாரதிக்குப் பிறகு வாத்தியார் ஒரு Cultural Force ஆக விளங்கியது குறித்தும் சாரு தனது பேச்சில் குறிப்பிட்டார்.

அரங்க மேடையில், வாத்தியாரின் நீண்ட விரல்கள் பேனாவோடு உறவாடும், enlarage செய்யப்பட்ட ஒரு வித்தியாசமான புகைப்படத்தை சுட்டிக் காட்டிப் பேசிய சிவசங்கரி, சுஜாதா இந்த வித்தியாசமான அஞ்சலிக் கூட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பார் என்றும், தமிழை எளிமைப்படுத்தியவர் பாரதி, அடுக்களைப் பெண்களையும் வாசிக்க வைத்தவர் கல்கி, தொழிலாளர்களையும் வாசிக்கச் செய்தவர் சி.பா.ஆ என்ற வரிசையில் இளைய தலைமுறையை மொத்தமாக ஈர்த்தவர் என்ற பெருமைக்குரியவர் சுஜாதா என்றும் கூறினார்.

வாத்தியார் தனது 40 வருட நண்பர் என்று நினைவு கூர்ந்த சிவசங்கரி, வாத்தியார் visual writing என்பதை தமிழுக்குக் கொண்டு வந்ததையும், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், இலக்கியம், கேள்வி-பதில் என்று அனைத்திலும் முத்திரை பதித்ததையும், சாவி அவர்கள் வாத்தியாருக்கும், வேணுகோபாலனுக்கும் தனக்கும், 'நட்சத்திர அந்தஸ்து' பெற்றுத் தந்ததையும், வாத்தியார் தன் எழுத்துக்கு பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்ததையும், வாத்தியார் தமிழ் எழுத்துலகில் ஒரு trend setter ஆக பல காலம் விளங்கியதையும் குறிப்பிட்டுப் பேசினார். 30 வருடங்களுக்கு முன் வாத்தியார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று செலவிட்ட மகிழ்ச்சியான தருணங்களை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்!

மதன், சுஜாதா கட்டிய கண்ணுக்குத் தெரியாத மேம்பாலத்தில் பயணித்த எழுத்தாளர்களில் தானும் ஒருவன் என்றும், வாத்தியார் மீடியாவில் எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாலும் உடனடியாக ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றியது பற்றியும், அவரது மகத்தான அறிவால் பலரையும் அண்ணாந்து பார்க்க வைத்தவர் என்றும், வாத்தியார் (குறைந்த) ஊதியத்தைப் பற்றிக் கவலைப்படாததால் தான் சினிமாவில் பரிமளிக்க முடிந்தது என்றும், திறமை மிக்கவர்களை சினிமாவுக்கு வரவழைக்க எழுத்தாளர்களின் சம்பளத்தை கூட்ட வேண்டும் என்றும்,வாத்தியார் தமிழ்நாட்டை விடுத்து வேறெங்காவது பிறந்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்து இருப்பார் என்றும், சில controversial விஷயங்களை தொட்டுப் பேசினார் !

Pentamedia சந்திரசேகர், James Hadley Chase, Harodl Robbins வாசித்த தலைமுறையை நைலான் கயிறு, அனிதா இளம் மனைவி போன்ற நாவல்களால் தமிழுக்குத் திருப்பிய பெருமை வாத்தியாரையே சாரும் என்றும், தனது நிறுவனம் தயாரித்த பாண்டவாஸ், அலிபாபவும் 40 திருடர்களும், புத்தா, கல்லிவர் டிராவல்ஸ் போன்ற அமிமேஷன் படங்களுக்கு அவரது திரைக்கதையும், எளிய ஆங்கில வசனமும் வலு சேர்த்தன என்றும், வாத்தியார் ஒரு நிஜமான 'multi media' (வானொலி, டிவி, சினிமா, பத்திரிகை ..) மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். Pentamedia அலுவலகத்தில் வாத்தியார் பயன்படுத்திய அறையை கடந்த 2 வருடங்களாக யாரும் பயன்படுத்தவில்லை என்றும் நெகிழ்ச்சியாகக் கூறினார்.

ஓவியர் ஜெயராஜ் ஜாலியாகப் பேசினார். வாத்தியார் எழுத்தில் சுவாரசியமும், spontaneity-யும் இருந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக, "எதிர்வாடையில் ஒரு ஜெயராஜ் போய்க் கொண்டிருந்தது" என்று சுஜாதா எழுதியதை அவர் சுட்டியவுடன் அரங்கில் கைதட்டல் ! வாசகரின் அறிவுத்திறனை மதித்தும், வட்டார வழக்கை கூர்மையாக அவதானித்தும் வாத்தியார் எழுதினார் என்றும் ஜெ குறிப்பிட்டார். வாத்தியார் நகைச்சுவையை காஷ¤வலாகவும், subtle ஆகவும் வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர் என்றாலும், அவரை தமிழகத்தின் பெர்னார்ட் ஷா என்றெல்லாம் உளர தான் விரும்பவில்லை என்றும், மற்றவர்களை மனம் திறந்து பாராட்டுவதில் வாத்தியாருக்கு நிகர் அவரே என்றும் ஜெ கூறினார் !

ஒரு முறை சாவி நடத்திய வாசகர் விழா ஒன்றில், சுஜாதாவை இளைஞர்கள் மொய்த்துக் கொண்டு, தங்கள் சட்டையைக் கழற்றி மார்பில் கையெழுத்து இடுமாறு அன்புத் தொல்லை செய்தபோது, வாத்தியார் கண்களோ அங்குமிங்கும் அலை பாய்ந்தன. 'என்ன தேடறீங்க?' என்று ஜெ கேட்க, 'வாசகிகள் யாரையும் காணோமே!' என்றாராம் வாத்தியார் :)

இன்னொரு சமயம், மாரீஸ் ஓட்டலில் மேடையில் பேசுவதற்கு முன்னால் தான் நெர்வஸாக இருந்தபோது வாத்தியாரிடம் டிப்ஸ் கேட்டதையும், அதற்கு சுஜாதா மெல்ல, 'எனக்கும் உதறலாத் தான் இருக்கு!' என்றதையும் நினைவு கூர்ந்த ஜெ, வாத்தியாருக்கே உதறல் என்ற சங்கதி தனக்கு தெம்பைக் கொடுத்ததால், மேடையில் அன்று சிறப்பாக தான் பேச முடிந்ததாகவும் நகைச்சுவையாகக் கூறினார். அன்று, பேச்சை முடித்துக் கொண்டு ஜெ மேடையை விட்டு இறங்கியவுடன், வாத்தியார், "என்னய்யா, உதறி முடிச்சாச்சா?" என்று கலாய்த்ததை இன்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்று ஜெயராஜ் கூறினார் :)

வாத்தியார் இல்லை என்ற விஷயத்தை தன்னால் தாங்க முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் ஜெ தன் உரையை முடித்துக் கொண்டார் !

மற்ற பிரபலங்கள் பேசியவை மூன்றாம் (இறுதி) பாகத்தில் வரும் !

எ.அ.பாலா

Monday, March 03, 2008

422. "வாத்தியார்" சுஜாதாவின் இரங்கல் கூட்டம் - பாகம் 1

டோண்டு தன் பதிவில் சொல்லாமல் விட்ட விஷயங்கள் இப்பதிவில் இருக்கலாம்.

வகுப்பறைக்கு அப்பாற்பட்டு நான் கற்றுக் கொண்ட பலவற்றுக்கும், சில சமயங்களில் தூண்டுகோலாகவும் பல சமயங்களில் ஆசானாகவும் நான் நினைக்கும் சுஜாதா சாருக்கு சென்னை நாரத கான சபாவில் நேற்று இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, தேசிகன் மூலம் தெரிய வந்தது, சென்றிருந்தேன். சுஜாதா மட்டுமே தமிழ் எழுத்துலகின் (வாசகர்களுக்கும், பல எழுத்தாளர்களுக்கும்!) உண்மையான ஜனரஞ்சக வாத்தியார் என்றால் அது மிகையாகாது !

நான் சென்றபோது பாதி அரங்கமே நிறைந்திருந்தது, ஆனால் மெல்ல மெல்ல ஒரு 90% நிறைந்து விட்டது. வாத்தியாரின் வாசகர்கள் ஆகவும் நண்பர்கள் ஆகவும் விளங்கிய பிரபலங்கள் பலர் உரையாற்றினர். அவர்கள் பேசியதிலிருந்து, சுஜாதா என்பவர் பெரிய எழுத்தாளர்/சிந்தனாவாதி/அறிவுஜீவி என்பதை தாண்டி, ஒரு மிகச் சிறந்த மனிதர் என்பது புரிந்தது !

முதலில், விஜய் டிவியில் வாத்தியார் முன்பொரு முறை அளித்த பேட்டி (சிகரம் தொட்ட மனிதர்கள் என்ற நிகழ்ச்சிக்கு) ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர், PG Wodehouse தனது 93வது வயதில் ஒரு கதையை டைப் அடித்துக் கொண்டிருந்தபோதே இறந்து போன நிகழ்வைக் கூறி, அதே போல மரணிக்கும் வரை எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை தனக்கும் இருப்பதாகச் சொன்னது கொஞ்சம் நெகிழ்ச்சியைத் தந்தது! அப்படியே மரித்தும் போனார் தானே !!!

அதன் பின், வாத்தியாருக்குப் பிடித்த திவ்யபிரபந்தப் பாசுரத்துடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது.
பாடியவர்: நெய்வேலி சந்தானகோபாலன் அவர்கள் புதல்வி ஸ்ரீரஞ்சனி
இயற்றியவர்: குலசேகர ஆழ்வார்
பாசுரம்:
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின்கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்தியங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே


பொருத்தமான பாசுரம் என்று தான் தோன்றுகிறது. குலசேகர மன்னன் வேண்டியது போல, வாத்தியார், வைகுந்தத்தில் படியாய் மாறி அவ்வரங்கனை நேரில் கண்குளிர தரிசித்துக் கொண்டிருக்கும் பாக்கியம் பெற்றிருப்பார் என்றே நினைக்கிறேன்!

இரங்கல் நிகழ்ச்சியை சுவைபட தொகுத்தவர் நடிகர் பார்த்திபன். நடுநடுவே அவர் கூறிய சின்னச்சின்ன விஷயங்களில் இரண்டு மனதைத் தொட்டது.

1. பல எழுத்தாளர்களை வாசகராகக் கொண்ட சுஜாதா, தன்னைப் போன்ற வாசகனை எழுத்தாளனாக்கியதை நினைவு கூர்ந்த்தார்.
2. சுஜாதா ஒரு முறை அவர் துணைவியாரிடம், அவருக்காக தான் பெரிய அளவில் எதுவும் சேர்த்து வைத்து விட்டுப் போகாததாகக் கூறியதாகவும், அதற்கு 'உண்மையான' சுஜாதா, "நீங்கள் எழுதிய எல்லாவற்றையும் என் பேரில் தானே எழுதியிருக்கிறீர்கள், அதை விட வேறென்ன வேண்டும் எனக்கு!" என்றாராம் !

பிரபலங்கள் பேசியதில் முக்கியமானவற்றை மட்டும் பகிர்கிறேன்.

மனுஷ்யபுத்ரன் தன் உடலின் ஒரு பகுதியை இழந்தது போல உணர்வதாகவும், சுஜாதா வாசகர் சந்திப்பு நிகழ்வுகளில் ஆர்வமாக பங்கெடுத்துக் கொண்டதையும், வருடாவருடம் வாத்தியார் நினைவாக சுஜாதா விருது வழங்கவிருப்பதாகவும் தெரிவித்தார். சுஜாதா தனக்கு புது வாழ்வளித்தவர் என்றும் கூறினார்.

ரா.கி.ர, சுஜாதா என்ற சிறந்த நண்பரின் இழப்பு தன்னை மிகவும் அழ வைத்து விட்டதாகவும், சுஜாதா பத்திரிகை உலக அவசரங்களுக்கு மதிப்பு கொடுத்த விதத்திற்காக அவரை Editor's Delight என்று சிலாகித்தும், பாரதி போல, கல்கி போல இன்னொரு சுஜாதா வருவதற்கும் சாத்தியமில்லை என்றும் அஞ்சலி செலுத்தினார்.

வாத்தியாரின் மைத்துனியும், எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி முதல்வரும் ஆன நிர்மலா பிரசாத், தங்கள் கல்லூரியின் ஏகலைவர்கள் (மாணவிகள்) ஒரு துரோணாச்சாரியரை இழந்து வாடுவதையும், வாத்தியாரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் தமிழ் துணைப்பாட நூலாக சேர்க்கப்பட்டதும் தமிழ் வகுப்புகளில் 100% அட்டென்டன்ஸ் ஆனதையும், உரைகள்/சந்திப்புகள் வாயிலாக தமிழ் ஜர்னலிஸம் மாணவிகளுக்கு (கல்லூரியின் நிஜமான வாத்தியார்களுக்கு மேலாக!) அற்புதமான அறிவுரைகள் / ஆலோசனைகள் வாத்தியார் வழங்கியதையும், வாத்தியார் தனது பாரதி திரைப்பட அறிமுக உரை மூலம், தமிழர் அல்லா மாணவிகளுக்கும் பாரதி மேல் ஈடுபாடு வரச் செய்ததையும் எடுத்துக் கூறினார்.

கிரேசி மோகன் பேசியது சற்றே உருக்கமாக இருந்தது. பெங்களூரில் தனது நாடகங்களுக்கு வாத்தியார் வந்திருந்து, குழந்தை போல குலுங்கிக் குலுங்கி சிரித்து, கண்ணில் நீர் வர ரசித்ததை மோகனும் மற்றவரும் திரை மறைவிலிருந்து பார்த்து பரவசப்பட்டதையும், நாடகம் முடிந்தவுடன் குறைநிறைகளை (லாயர் கணேஷ் போல) வாத்தியார் அழகாக அலசியதையும் கிரேசி நினைவு கூர்ந்தார். மேலும், வாத்தியார் நாடகத்துறைக்கு செய்த சேவை மகத்தானது என்றும், வாத்தியார் (திவ்ய பிரபந்தம் மேல் அவருக்கு இருந்த காதலால்) தற்சமயம் வைகுண்டத்தில் பெருமாள் பக்கத்தில் இருப்பதை விட ஆழ்வார்கள் அருகே இருப்பதையே விரும்புவார் என்றும் சுவைபடக் கூறினார்.

மூத்த எழுத்தாளர் ஜெயகாந்தன், மனைவி பெயரில் எழுதியவர்கள் மேல் தனக்கு பெரிய அபிப்பிராயம் இருந்ததில்லை என்றும், சுஜாதா அதை மாற்றியதாகவும், வாத்தியார் தனது கதைகளில் பெண்களை 26,36 என்று நம்பர்களாக ஆக்கியதையும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்! இறந்தவுடன் சுஜாதா எல்லோருக்கும் வேண்டப்பட்டவர் ஆயிட்டார் என்று ஜெ.கா சொன்னதை ஏற்க முடியவில்லை. வாழும்போதே அவர் (சில வலைப்பதிவர்களை தவிர்த்து!) பெரும்பாலானவருக்கு வேண்டப்பட்டவராகவே இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை. நவீனமான விஷயங்களையும், அறிவியல் / தொழில்நுட்பச் சிந்தனையையும் தமிழுக்குக் கொண்டு வந்ததில் சுஜாதா பெரும்பங்காற்றியுள்ளார் என்று ஜெ.கா சிலாகித்துக் கூறினார். பல ஆண்டுகளுக்கு முன் ஒரு லாட்ஜ் ரூமில் சுஜாதாவுடன் ஓர் இரவு முழுதும் விழித்திருந்து தமிழ் இலக்கியம் பற்றி விவாதித்தையும் நினைவு கூர்ந்தார்.

ஆ.வியின் அசோகன், வாத்தியாரின் தாக்கமே இல்லாத எழுத்தாளர்கள் மிகக் குறைவு என்றும், அவரைப் போல எழுதினாலும் அல்லது அவரைப் போல எழுதாவிட்டாலும், இரண்டுமே பெருமைப்படக் கூடிய விஷயங்கள் தான் என்றும் கூறினார் !

இந்திரா பார்த்தசாரதி, வாத்தியாரின் 'நைலான் கயிறு' ஒரு முன்னோடி என்றும், தான் நாடகம் எழுதுவதற்கு வாத்தியார் தான் இன்ஸ்பிரேஷன் என்றும், தனது 'மழை' என்ற நாடகத்தைப் பார்த்து விட்டு அதை தமிழில் மொழி பெயர்த்தால்(!) நன்றாக இருக்கும் என்று சுஜாதா சொன்னதையும், 1965 காலகட்டத்தில், தானும், சுஜாதாவும், 'கணையாழி' கஸ்தூரி ரங்கனும் தில்லியில், இலக்கியம் சார்ந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதையும் நாஸ்டால்ஜிக்காகக் கூறினார்.

நடிகர் சிவகுமார், வாத்தியாரின் 'மேகத்தை துரத்தினவன்', நைலான் கயிறு, வைரங்கள், மறுபடியும் கணேஷ், கொலையுதிர் காலம் போன்ற கதைகளை வாசித்தும், அவரது டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு, அன்புள்ள அப்பா போன்ற நாடகங்களை பார்த்தும் தான் 'மிரண்டு' போனதை வாத்தியாரிடமே போன் போட்டுச் சொன்னதைக் குறிப்பிட்டார். வாத்தியார் தங்கள் வீட்டுக்கு தங்க வரும்போது, தன்னிடம் ஒரு லுங்கி வாங்கிக் கட்டிக் கொண்டு, தன்னோடு உணவருந்தி இயல்பாக இருந்த நாட்களையும் சிவகுமார் நினைவு கூர்ந்ததோடு, வாத்தியார் சகமனிதர்களை பலவீனங்களோடு ஏற்றுக் கொண்ட Down to Earth மனிதர் என்றும் சிலாகித்துப் பேசினார். சுஜாதா, கமலை அறிவு வழியாகப் பேசுபவர் என்றும், தன்னை மனசு வழியாகப் பேசுபவர் என்றும் ஒரு முறை சொன்னதை சிவகுமார் குறிப்பிட்டார்!

அடுத்துப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், நா.பார்த்தசாரதி அவர்கள் தினமணி கதிர் ஆசிரியராக இருந்தபோது, ஒரு சமயம் வெண்பா போட்டி அறிவித்ததையும், அதற்கு வாத்தியார் "வேண்டாம் வரதட்சிணை" என்ற தலைப்பில் நகைச்சுவை வெண்பா எழுதியதையும், அதை கிருஷ்ணனின் தந்தை கட்டம் கட்டி பதிப்பித்ததையும் குறிப்பிட்டார் !

பத்துபவுன் தங்கம் பளிச்சென்ற கல்வளையல்
முத்திலே சின்னதாய் மூக்குத்தி - மத்தபடி
பாண்டு வைத்து ஊர்கோலம் பாட்டு இவைதவிர
வேண்டாம் வரதட்சிணை!


சுஜாதா ஒரு தசாவதானி என்றும், அவருக்கு எல்லா வித தமிழ் தட்டச்சும் சரளமாக வரும் என்றும் கூறினார். ஒரு சமயம் ஒரு வாசகர், "1330 குறள்கள் இருப்பதால், அதை திருக்குறள்கள் என்று தானே குறிப்பிட வேண்டும், ஏன் திருக்குறள் என்று ஒருமையில் இருக்க வேண்டும் ?" என்று கேட்ட கேள்விக்கு, வாத்தியார் spontaneous ஆக "திருக்குறள் 'கள்'ளை அனுமதிப்பதில்லை" என்று பதில் கூறியதையும், திருமதி சுஜாதாவின் சீரிய கவனிப்பால் தான் ஒரு 10 வருடங்கள் அவர் அதிகமாக உயிர் வாழ்ந்ததாகவும் கிருஷ்ணன் கூறினார்.

சாரு நிவேதிதா, சிவசங்கரி, மதன், ஓவியர் ஜெயராஜ், பேராசிரியர் ஞானசம்பந்தன், கஸ்தூரி ரங்கன், கமல், வைரமுத்து, தங்கர் பச்சான், கனிமொழி, நண்பர் தேசிகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் இரங்கற் கூட்டத்தில் பேசியதை அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்.

எ.அ.பாலா

Saturday, March 01, 2008

421. சுஜாதா அஞ்சலிப் பதிவுகள் - பட்டியல்

எழுத்தாளர் சுஜாதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எழுதப்பட்ட பலப்பல பதிவுகளை / கட்டுரைகளை, வாசிப்பதற்கு வசதியாக அவ்விடுகைகளின் சுட்டிகளை இங்கே (நான்அறிந்தவரை) தொகுத்திருக்கிறேன். விட்டுப் போனவை குறித்து பின்னூட்டத்தில்தெரிவித்தால், அவற்றையும் இப்பதிவில் சேர்த்து விடுகிறேன். நன்றி.

எ.அ.பாலா


http://truetamilans.blogspot.com/2008/03/blog-post.html
(மனதை நெகிழ வைத்த (என்னைப் போன்ற) ஒரு சாதாரண வாசகனின் அஞ்சலி!)

A tribute by Raji

http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html
http://desikan.com/blogcms/?item=208
http://desikan.com/blogcms/?item=207
http://desikan.com/blogcms/?item=206
http://desikan.com/blogcms/?item=205

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/422-1.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/423-2.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/424-3.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/425-4.html

http://balakumaranpesukirar.blogspot.com/2008/03/blog-post.html
http://naalavathukann.blogspot.com/2008/03/blog-post.html
http://tamiloviam.com/unicode/02280803.asp
http://karaiyoram.blogspot.com/2008/03/blog-post.html

http://penathal.blogspot.com/2008/02/blog-post.html
http://pitchaipathiram.blogspot.com/2008/02/blog-post_27.html
http://domesticatedonion.net/tamil/?p=741
http://cyrilalex.com/?p=387
http://imohandoss.blogspot.com/2008/02/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/
http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_28.html

http://icarusprakash.wordpress.com/2008/02/27/thank-you-sir-for-everything/
http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_29.html
http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html
http://valai.blogspirit.com/archive/2008/02/27/sujatha.html
http://andaiayal.blogspot.com/2008/02/blog-post.html

http://anamikatalks.blogspot.com/2008/02/author-sujatha-is-no-more.html
http://mogadalai.wordpress.com/2008/02/27/sujatha-rip/
http://www.chakkarapani.com/graffiti/?p=316
http://balajiulagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://chennai.metblogs.com/archives/2008/02/writer_sujatha_is_dead.phtml

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/38810
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/12866

http://naachiyaar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.html

http://santhipu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://vasanthamravi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://surveysan.blogspot.com/2008/02/blog-post_1876.html
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_5951.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_7099.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html
http://puthupunal.blogspot.com/2008/02/blog-post.html
http://cdjm.blogspot.com/2008/02/blog-post.html

http://vadakarai.blogspot.com/2008/02/blog-post.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_28.html
http://usthamizhan.blogspot.com/2008/02/blog-post.html
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_28.html

http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_9834.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_27.html
http://feeds.vicky.in/~r/dhandora/~3/242335441/
http://osaichella.blogspot.com/2008/02/blog-post_100.html

http://ravisrinivas.blogspot.com/2008/02/blog-post_29.html
http://thoughtsintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://pettagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html

http://ilackia.blogspot.com/2008/03/blog-post.html
http://bashakavithaigal.wordpress.com/2008/02/28/சுவாரஸ்யம்-போய்விட்டதா-ச/
http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_28.html
http://oagaisblog.blogspot.com/
http://tvrk.blogspot.com/

http://pradeep.blogspot.com/2008/03/blog-post.html
http://losangelesram.blogspot.com/2008/02/1.html
http://sangappalagai.blogspot.com/2008/03/44.html
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_28.html

http://umakathir.blogspot.com/2008/02/blog-post_27.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post_27.html
http://harimakesh.blogspot.com/2008/02/189.html
http://koculan.blogspot.com/2008/02/blog-post_28.html

http://sandanamullai.blogspot.com/2008/02/blog-post.html
http://poothoorigai.blogspot.com/2008/02/blog-post_27.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html
http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://nagarjunan.blogspot.com/2008/02/blog-post_8509.html
http://varmah.blogspot.com/2008/03/blog-post_02.html
http://valpaiyan.blogspot.com/2008/02/blog-post_27.html
http://mithra11.blogspot.com/2008/03/blog-post.html
http://raasaa.blogspot.com/2008/02/progressive-compromises.html

http://mei-pungkaadan.blogspot.com/2008/02/blog-post_3482.html
http://palipedam.blogspot.com/2008/03/blog-post.html
http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kaalapayani.blogspot.com/2008/02/2.html
http://thiruvadiyan.blogspot.com/2008/02/blog-post_28.html
http://pksivakumar.blogspot.com/2008/02/blog-post_27.html

http://www.tamilstar.com/news/publish/article_5663.shtml

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails